சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் உள்ள மதுபானக் கூடத்திற்கு நேற்று முன்தினம் இரவு கடலோர காவல்படை கமாண்டர் தனது மனைவியுடன் வந்திருந்தார். இருவரும் மது குடித்தபடி பப்பில் இசைக்கப்பட்ட பாடலுக்கு ஏற்றபடி நடனம் ஆடியுள்ளனர். அப்போது, இளைஞர் ஒருவர் மதுபோதையில் தனியாக நடனமாடிக் கொண்டிருந்தார். கமாண்டர் மனைவி நடனமாடுவதை பார்த்த அந்த இளைஞர் அவருடன் சேர்ந்து நடனமாட முயற்சி செய்தார். அப்போது கமாண்டர் அதை பார்த்து எச்சரித்து அந்த இளைஞரை அனுப்பியுள்ளார்.
ஒரு கட்டத்தில் இளைஞர் கமாண்டர் மனைவியிடம் நெருக்கமாக சென்று சில்மிஷம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சிடைந்த கமாண்டர் மனைவி சம்பவம் குறித்து தனது கணவரிடம் கூறியுள்ளார். உடனே கமாண்டர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அதன்படி விரைந்து வந்த தேனாம்பேட்டை போலீசார் கமாண்டர் மனைவியுடன் போதையில் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், பழனியை சேர்ந்த சத்தியபிரகாஷ் என்றும், இவர் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றுவதும் தெரியவந்தது.
இதற்கிடையே தன்னிடம் போதையில் தவறாக சில்மிஷம் செய்ய முயன்றதாக கமாண்டர் மனைவி சார்பில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி போலீசார் தீவிர விசாரணை நடத்தி சத்தியபிரகாஷை கைது செய்தனர். இந்நிலையில், கைதான சத்தியபிரகாஷை பணியில் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து மருத்துவக் கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.