ஒட்டன்சத்திரம், பிப்.24: ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கொல்லபட்டிக்கு நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கொல்லப்பட்டி, குட்டில்நாயக்கன்பட்டி, பெயில்நாயக்கன்பட்டி ஆகிய பகுதியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கொல்லப்பட்டி பகுதிக்கு அரசு பேருந்து காலை, மாலை என இருவேளைகளிலும், மற்ற நேரங்களில் மினி பஸ்சும் இயக்கப்பட்டது. கொரோனா காலத்திலிருந்து இப்பகுதிக்கு எந்த பேருந்துகளும் இயக்கப்படவில்லை. இதனால் இங்குள்ள பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்கும், மார்க்கெட் செல்வதற்கும், மாணவர்கள் பள்ளி, கல்லூரி செல்வதற்கும் பேருந்துகள் இன்றி பெரும் சிரமமடைகின்றனர்.
பேருந்து வசதி இல்லாததால் ஆட்டோ மற்றும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் ஒட்டன்சத்திரம் நகருக்கு வந்து செல்கின்றனர். தற்போது பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளதால் இருசக்கர வாகனங்களில் செல்வதற்கும் தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே விவசாயிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலன் கருதி, கொல்லப்பட்டி பகுதிக்கு காலை 8.30 மணிக்கும் மாலை 4.30 மணிக்கும் அரசு பேருந்து மற்றும் மினி பஸ் பேருந்துகளின் சேவைகளை தொடர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.