×

கூத்தாநல்லூர் நகராட்சி 20வது வார்டில் வென்ற திமுக வேட்பாளர் பாத்திமா பஷிரா எம்எல்ஏ பூண்டி கலைவாணனிடம் வாழ்த்து

மன்னார்குடி, பிப்.24: கூத்தாநல்லூர் நகராட்சி 20வது வார்டில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் பாத்திமா பஷிரா மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏவை நேரில் சந்தித்து வெற்றி சான்றிதழை காட்டி வாழ்த்து பெற்றார். திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில் மொத்தம் உள்ள 24 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில் திமுக 17 வார்டுகளில் தனித்து வெற்றி பெற்று நகரசபையை கைப்பற்றியது. மேலும், திமுகவின் தோழமை கட்சிகளான இந்திய கம்யூ., 2 வார்டுகளிலும், காங்கிரஸ் கட்சி 1 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 3 வார்டுகளிலும், சுயேச்சை 1 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது. இதில் 20வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பாத்திமா பஷிரா 338 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் நசீமா பர்வீன் வெறும் 3 வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்தார்.

இந்நிலையில், கூத்தாநல்லூர் நகர் மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 20வது வார்டு வேட்பாளர் பாத்திமா பஷிரா உள்ளிட்ட 17 உறுப்பினர்கள் நகர திமுக பொறுப்பாளர் பக்கிரிசாமி, நகர பொறுப்புக்குழு உறுப்பினர் அமீர்தீன், தேர்தல் பொறுப்பாளரும் மன்னை கிழக்கு ஒன்றிய செயலாளருமான ஐவி குமரேசன் ஆகியோர் தலைமையில் கொரடாச்சேரி சென்று அங்கு மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏவை நேரில் சந்தித்து வெற்றி சான்றிதழ்களை காட்டி வாழ்த்து பெற்றனர். வேட்பாளர்களுடன், மாவட்ட பிரதிநிதி அரிச்சந்திரபுரம் செல்வம், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் சேனைக்கரை கண்ணன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ், கூத்தாநல்லூர் நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள் குமரேசன், ஹாஜா நஜ்முதீன், யாஸ்மின் பர்வீன், துரைமுருகன், புரோஜ்தீன், தகவல் தொழிநுட்ப அணி அமைப்பாளர் ஜெகதீசன், நகர இளைஞரணி அமைப்பாளர் ரபீன் பைசல் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் சென்றனர்.

Tags : DMK ,Fathima Bashira ,Boondi Kalaivanan ,Koothanallur ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி