தியாகதுருகம், பிப். 22: தியாகதுருகம் அடுத்த சூளாங்குறிச்சி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 6 முதல் 8ம் வகுப்பு வரை சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பன்னீர்செல்வம் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். மாணவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதாகவும், தேசிய திறனாய்வு தேர்வுகளில் சுமார் 28க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்ச்சி பெறுவதற்கு இவர் முக்கிய பங்கு வகித்துள்ளதாகவும் மாணவ-மாணவிகள் தெரிவிக்கின்றனர். ஆசிரியர் பன்னீர்செல்வத்தை பணியிட மாற்றம் செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் மாணவர்களின் பெற்றோர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தரை நேரில் சந்தித்து, ஆசிரியரை பணியிட மாற்றம் செய்ய வேண்டாம் எனவும், மீண்டும் அதே பள்ளியில் அவர் பணியாற்ற அனுமதி வழங்கக்கோரி மனு அளித்தனர். இந்நிலையில் நேற்று பள்ளி மாணவ மாணவிகள் சூளாங்குறிச்சி அரசு நடுநிலைப்பள்ளி அருகே சங்கராபுரத்தில் இருந்து ஆறகளுர் செல்லும் அரசுப்பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தியாகதுருகம் காவல் ஆய்வாளர் ராமதாஸ் தலைமையிலான போலீசார் மாணவ மாணவிகளை சமாதானப்படுத்தினர். தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இப்போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் அரைமணிநேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.