அறந்தாங்கி, பிப். 22: புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம் ஆர் புதுப்பட்டினம் கிராமத்தில் சித்தி விநாயகர், வள்ளி தேவசேநா சமேத சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோவில் ஆர். புதுப்பட்டினம் கிராம காஞ்சி பிள்ளைமார்கள், நெற்குப்பை இ.ஏகாம்பரம் சேர்வைகாரர் குடும்பத்தார்களால் திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து யாகசாலையில் புனிதநீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு 6 கால யாக பூஜைகள் நடைபெற்றன. நேற்று 6ம் கால யாகபூஜை நிறைவுற்று, புனிதநீர் அடங்கிய கடங்கள் பிள்ளையார்பட்டி தலைமை சிவாச்சாரியார் பிச்சை குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்களால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசத்தில் சிவாச்சாரியார் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் இரவு முத்துச்சிற்பி குழுவினரின் இன்னிசை கச்சேரியும், நேற்று சன் டிவி,ஆதித்யா டிவி புகழ் ஆதவன் குழுவினரின் காமெடி பல்சுவை நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ஆர். புதுப்பட்டினம் கிராம காஞ்சி பிள்ளைமார்கள், நெற்குப்பம் இ.ஏகாம்பரம் சேர்வைக்காரர் குடும்பத்தார்கள் செய்திருந்தனர்.