துரைப்பாக்கம்: சென்னை மாநகராட்சி பெருங்குடி 14வது மண்டலம் 182வது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மா.ஆறுமுகம் நேற்று கொட்டிவாக்கம் எம்.ஜி.ஆர்.நகர், கே.பி.கே.நகர், திருவள்ளுவர் நகர், சந்தோஷபுரம், பெத்தேல் நகர், சிபிஐ காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ச.அரவிந்த் ரமேஷ் பங்கேற்று மா.ஆறுமுகத்தை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பொதுமக்கள் மத்தியில் மா.ஆறுமுகம் பேசுகையில், ‘‘தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து பணிகளும் உடனுக்குடன் நடைபெற்று வருகிறது. அதேபோல் சென்னை மாநகராட்சி 182வது வார்டில் நான் வெற்றி பெற்றவுடன் இப்பகுதியில் பாதாள சாக்கடை வசதி, தரமான சாலை, மாணவர்கள் பயன்பெறும் வகையில் நூலகம், பொதுக்கழிப்பிடம், இளைஞர்களுக்கு உடற்பயிற்சி கூடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தெருவிளக்கு முறையாக பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்,’’ என்றார். பிரசாரத்தின்போது வட்ட செயலாளர் வி.வெங்கடேசன், ஏ.வி.எம்.ரமேஷ், கதிர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.