×

முதல்வரின் மக்கள் திட்டங்களால் உள்ளாட்சியில் 100 சதவீதம் வெற்றி உறுதி அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேச்சு

காரைக்குடி, பிப். 17:  தமிழக முதல்வர் 9 மாதங்களில் மக்கள் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருவதால் மக்கள் நிச்சயம் உள்ளாட்சியில் 100 சதவீத வெற்றியை வழங்குவார்கள் என அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
காரைக்குடி அருகே புதுவயல், கண்டனூர் பேரூராட்சியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 5வது தேர்தலை சந்திக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 9 மாதங்களில் மக்களுக்கான சிறப்பான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். மக்களிடத்தில் நமது முதல்வர் மீது மதிப்பு, மரியாதை அதிகமாக உள்ளது. எனவே நமது வெற்றி நிச்சயக்கப்பட்ட ஒன்று. நமது கூட்டணி கொள்கை ரீதியிலான கூட்டணி. நமது எண்ணம், உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக கூட்டணி தலைவர்கள் ஒன்றுகூடி பயணம் செய்கின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சியில் தோற்று விடுவோம் என்ற பயத்தால் தேர்தலை நடத்தாமல் ஜனநாயக படுகொலை செய்தார்கள். ஜனநாயகத்திற்கு உயிர் கொடுத்தவர் நமது முதல்வர். உள்ளாட்சி தேர்தலில் அதிமுக நிர்வாகிகளே போட்டியிடாமல் ஒதுங்கிவிட்டனர். உள்ளாட்சி அமைப்புகள் மூலமே அரசின் மக்களுக்கான திட்டங்கள் கிராமப்புறங்கள் வரை சென்றடையும். 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தந்தது போல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் மக்கள் 100 சதவீத வெற்றியை வழங்குவார்கள்’ என்றார். இதில் ஒன்றிய செயலாளர் சின்னத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,KR Periyakaruppan ,Chief Minister ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...