குறிஞ்சிப்பாடி பிப். 17: குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சேதமடைந்த கட்டிடம் இடித்து அகற்றப்பட வேண்டும என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அரசு வளர்ச்சித் திட்டங்களின் கீழ் பள்ளி, வீடு, அலுவலகங்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்காக அரசு சிமெண்ட் மற்றும் கம்பிகள் உள்ளிட்ட பொருட்களை இருப்பு வைக்க, சிறு கிடங்குகள் உள்ளன. இதில் சிமெண்ட் வைக்கப் பயன்படுத்தப்படும் சிறுகிடங்கு 2 என்ற கட்டிடம் மிகவும் சேதமான நிலையில் உள்ளது. ஆனால், இந்தக் கட்டிடத்தில் சிமெண்ட் மூட்டைகள் இருப்பு வைக்கும் பணிகள் தொடர்கிறது. இந்த கட்டிடத்தில் விபத்துகள் நிகழும் முன்னரே, பயன்பாட்டை நிறுத்த வேண்டும். மேலும் இதில் உள்ள மூட்டைகளை அப்புறப்படுத்தி, கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.