பந்தலூர், பிப்.15: பந்தலூரில் அரசு பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் மரக்கிளைகளுக்கு இடையே செல்லும் மின் கம்பியால் அச்சம் ஏற்பட்டுள்ளது. பந்தலூரில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சுற்று வட்டாரப்பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் இந்த பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளி வளாகத்தில் மரக்கிளைகளுக்கு இடையே ஆபத்தான நிலையில் செல்லும் உயர் மின் அழுத்த கம்பிகளால் பீதி ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளி வளாகத்தில் மரக்கிளைகளை தொட்டு விளையாடும்போது மின்கம்பிகளால் மாணவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான நிலையில் இருக்கும் உயர் மின்னழுத்தம் கம்பிகளுக்கு இடையே செல்லும் மரக்கிளைகளை மின்வாரியத்தினர் வெட்டி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.