×

திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் மாசி மக தெப்பத் திருவிழா நாளை நடக்கிறது

திருப்புத்தூர், பிப். 15: திருப்புத்தூர் அருகே, திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோயிலில் நாளை மாசி மக தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. திருப்புத்தூர் அருகே, திருக்கோஷ்டியூரில் சௌமிய நாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் மாசி மக தெப்ப உற்சவத்திருவிழா பிப்.7ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரண்டாம் நாள் முதல் 6ம் நாள் வரை தினசரி காலையில் சுவாமி திருவீதி புறப்பாடு, இரவில் சிம்மம், ஹனுமன், கருட சேவை, சேஷ வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி திருவீதி புறப்பாடு நடைபெற்றது.

6ம் நாள் இரவு திருவீதி புறப்பாடும், ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதலும் நடைபெற்றது. 7ம் நாள் நவகலச விஷேச திருமஞ்சனம், சூர்ணாபிஷேகம், தங்கத் தோளுக்கினியானில் திருவீதி புறப்பாடு நடைபெற்றது. 8ம் நாளான நேற்று இரவு தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பாடு நடைபெற்றது. 9ம் நாளான இன்று காலையில் வெண்ணைத்தாழி சேவையில் பெருமாள் திருவீதி புறப்பாடும், பகல் 11.30 மணியளவில் தெப்பம் முட்டுத்தள்ளுதலும், இரவு பெருமாள் தங்கப்பல்லக்கில் திருவீதி புறப்பாடு நடைபெறும். 10ம் திருநாளான நாளை பிப்.16ல் காலை பெருமாள் தங்கத்தோளுக்கினியானில் திருவீதி புறப்பாடும், பகல் தெப்பம் சுற்றுதலும், இரவு 9 மணிக்கு பெருமாள் தேவி, பூமி தேவியாருடன் மின்ஒளியால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி தெப்ப உற்சவம் நடைபெறும்.

Tags : Masi Maga Theppath festival ,Thirukkoshtiyur Perumal Temple ,
× RELATED திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் மாசி மக தெப்பத் திருவிழா