×

இடைக்கழிநாடு பேரூராட்சியில் வாக்காளர்களுக்கு வழங்க இருந்த ரைஸ் குக்கர்கள் பறிமுதல்

செய்யூர்: இடைக்கழிநாடு பேரூராட்சியில் வாக்காளர்களுக்கு வழங்க இருந்த ரைஸ் குக்கர்களை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழகம் முழுவதும் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. அதனால், திமுக, அதிமுக உள்பட பல்வேறு கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வாக்காளர்களை கவர்வதற்காக பல கட்சியினர் பணம் பட்டுவாடா உள்பட பல்வேறு செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதனை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், செய்யூர் வட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சி 19வது வார்டில், வாக்காளர்களுக்கு ரைஸ் குக்கர் வழங்கப்படுவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் சூனாம்பேடு போலீசார், வீடு வீடாக சென்று சோதனை செய்தனர். அப்போது, அங்கு நின்றிருந்த காரை சோதனை செய்தபோது, அதில் 10க்கும் மேற்பட்ட ரைஸ் குக்கர்கள் இருந்தது தெரிந்தது. இதையடுத்து பறக்கும் படையினர், வாக்காளர்களுக்கு வழங்க இருந்த ரைஸ் குக்கர்களை பறிமுதல் செய்தனர். மேலும், பொதுமக்களுக்கு குக்கர் வினியோகம் செய்ய முயன்றவர்களை தேடி வருகின்றனர். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட ரைஸ் குக்கர்களை தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தா ஜெயலட்சுமியிடம்  ஒப்படைத்தனர்.

Tags : Interstate Municipality ,
× RELATED வார்டு உறுப்பினர் பதவி ரூ.24...