×

வரும் 17ம் தேதி வஉசி அலங்கார ஊர்தி வருகை: கலெக்டர் தலைமையில் ஆலோசனை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு, வரும் 17ம் தேதி வஉசி அலங்கார ஊர்தி காஞ்சிபுரம் வருகிறது. இதையொட்டி, அதன் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு வரும் 17ம் தேதி வரவுள்ள வஉசி மற்றும் ஈ.வெ.ரா.பெரியார் அலங்கார ஊர்திகளை, பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசுத் துறை அலுவலர்களுடன் கலெக்டர் ஆர்த்தி ஆலோசனை மேற்கொண்டார். கூட்டத்தில் சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 26ம் தேதி குடியரசு தினவிழாவில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் 3 அலங்கார ஊர்திகள் வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன. அந்த ஊர்திகள் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களுக்கும் அனுப்பப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு வரவுள்ள வஉசி மற்றும் ஈ.வெ.ரா.பெரியார் அலங்கார ஊர்திகளை சிறப்பாக வரவேற்று பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள், மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு அளித்தல்,  பாதுகாப்பான முறையில் கொண்டு வருதல், கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தல், பொதுமக்களின் பார்வைக்கு காட்சிபடுத்துதல் உள்பட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் குறித்து பேசப்பட்டது. மேலும், பொதுமக்கள் கண்டு களிப்பதற்கு தேவையான முன்னேற்பாடுகளை அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக செய்ய வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார். இதில் எஸ்பி சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், ஊரக முகமை வளர்ச்சி திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி உப்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Vausi Ornamental Vehicle ,
× RELATED வரும் 17ம் தேதி வஉசி அலங்கார ஊர்தி வருகை: கலெக்டர் தலைமையில் ஆலோசனை