×

வாலாஜாபாத் ரவுண்டானா வழியாக கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் ரவுண்டானா வழியாக, கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதில், காலை 7 மணிமுதல் இரவு 9 மணிவரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் மற்றும் சாலவாக்கம் பகுதிகளில் இயங்கும் கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களில் இருந்து வாலாஜாபாத் வழியாக சென்னை செல்லும் கனரக வாகனங்கள், லாரிகளால் வாலாஜாபாத் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கடும் சிரமம் அடைகின்றனர்.

இதனால், வாலாஜாபாத் மற்றும் சாலவாக்கம் பகுதிகளில் இருந்து செல்லும் கனரக வாகனங்கள் காலை 7 மணிமுதல் 11 மணிவரையும்,  மாலை 4 மணிமுதல் இரவு 9 மணிவரையும் வாலாஜாபாத் ரவுண்டானா வழியாக செல்ல முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அந்த நேரங்களில் கனரக வாகனங்கள் பழையசீவரம், பாலூர், எழிச்சூர், ஒரகடம் வழியாக சென்னை மற்றும் இதர பகுதிகளுக்கு செல்லலாம்.  கிரஷர் மற்றும் குவாரிகளுக்கு செல்லும் வாகனங்களும் இதே வழியை பயன்படுத்த வேண்டும். மாகரல், உத்திரமேரூர் பகுதிகளில் இருந்து வரும் கனரக வாகனங்கள் ஓரிக்கை ஜங்ஷன், செவிலிமேடு ஜங்ஷன், பாலாறு ஜங்ஷன்,  கீழம்பி வழியாக ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், சென்னை செல்ல வேண்டும். வந்தவாசி, செய்யாறு பகுதிகளில் இருந்து வரும் கனரக வாகனங்கள் செவிலிமேடு, பாலாறு ஜங்ஷன், கீழம்பி வழியாக ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், சென்னை செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : Walajabad ,
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...