முசிறி, பிப். 12: அம்மன் ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகவும், சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக விளங்குகிறது சமயபுரம் மாரியம்மன் கோயில். இத்திருக்கோவிலில் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் வருடாந்திர ஹோம பூஜை நடைபெறும் இந்நிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்று 5ம் ஆண்டை முன்னிட்டு ஸம்வத் சராபிஷேகம் மற்றும் நவசண்டி ஹோமம் நடைபெற்றது. இதில் மஹாநவசண்டி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, வடுக பூஜை, சுமங்கலி பூஜை, மூலிகை பழங்கள் உள்ளிட்டவைகள் யாக வேள்வியில் போடப்பட்டு நவசண்டி ஹோமமும், திரவியாஹூதியும், மஹாபூர்ணாஹூதியும் நடைபெற்றது.
தொடர்ந்து கடங்கள் புறப்பட்டு திருக்கோவிலை வலம் வந்து மூலவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. உற்சவ அம்மன் தங்க கவசத்தில் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் தலைமையில் கோயில் பணியாளர்கள், கோயில் குருக்கள்கள் செய்திருந்தனர்.