திருவெறும்பூர், பிப். 12: திருவானைக்காவல் அருகே உள்ள பனையபுரத்தில் புதிதாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் கல்லணை, நடுகரை பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவானைக்காவல் அருகே உள்ள பனையபுரத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் நேற்று திறக்கப்பட்டது.இதனை திருச்சி கலெக்டரின் நேர்முக வேளாண் உதவி அலுவலர் மல்லிகா பார்வையிட்டார். இந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த நெல் மணிகளை இடைத்தரகர்கள் இல்லாமல் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து கூடுதல் விலை பெறமுடியும்.
இந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் பனையபுரம், உத்தமர்சீலி, கவுத்தரசநல்லூர், கிளிக்கூடு, திருவளர்சோலை, பொன்னுரங்கபுரம் உள்ளிட்ட கல்லணை, நடுகரை பகுதி விவசாயிகள் பயனடைவார்கள். இந்த நேரடி அரசு நெல் கொள்முதல் நிலையம் 15 நாட்கள் முன்கூட்டியே திறந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என விவசாயிகள் கூறுவதுடன் தற்போது திறக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியே என கூறினார்கள். இந்த விழாவில் பனையபுரம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமரன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.