×

வியாசர்பாடி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான சாமியார் மடம் கோயில் புனரமைக்கப்படும்: காங்கிரஸ் வேட்பாளர் டில்லிபாபு உறுதி

பெரம்பூர், பிப்.12: பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 37வது வார்டில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டில்லிபாபு நேற்று வியாசர்பாடி சாமியார் மடம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். அப்போது வேட்பாளர் டில்லிபாபு பொதுமக்களிடம் கூறுகையில், ‘‘இங்குள்ள சாமியார் மடம் கோயில் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ளது. மேலும், கோயில் குளத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால் மாசடைந்து வருகிறது. இதை சீரமைக்க வேண்டும், என பொதுமக்கள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நான் வெற்றி பெற்ற அடுத்த 6 மாதத்திற்குள் கோயிலை புனரமைத்து, சுற்றுச்சுவர் அமைப்பேன். பல ஆன்மிக குருமார்கள் ஜீவசமாதி அடைந்த இந்த இடத்திற்கு வெளி மாநிலங்களில் இருந்து கூட பக்தர்கள் வந்து செல்கின்றனர். எனவே இந்த கோயிலின் வரலாற்றையும், புகழையும் அறநிலையத்துறை உதவியோடு பராமரிக்க நடவடிக்கை எடுப்பேன்,’ என்றார். தொடர்ந்து, உதயசூரியன் நகர் 1வது பிளாக்கிலிருந்து 20வது பிளாக் வரை வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். பின்னர், எம்கேபி நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags : Vyasarpadi ,Samiyar Madam temple ,Congress ,Dillibabu ,
× RELATED செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது...