×

மதுராந்தகம் நகராட்சி 17வது வார்டில் மக்களின் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலனை செய்வேன்: திமுக வேட்பாளர் மலர்விழி குமார் உறுதி

மதுராந்தகம்: மதுராந்தகம் நகராட்சி 17வது வார்டில், மக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து, குறைகளை தீர்த்து வைப்பேன் என திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் நகரமன்ற தலைவர் மலர்விழி குமார், தனது பிரசாரத்தின்போது உறுதியளித்தார். மதுராந்தகம் நகராட்சி 17வது வார்டில் திமுக சார்பில், நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் முன்னாள் நகரமன்ற தலைவர் மலர்விழி குமார் தேரடி தெரு, மருத்துவமனை சாலை, வடராயன் தெரு ஆகிய பகுதிகளில் கட்சி நிர்வாகிகள், முன்னோடிகள் ஆகியோருடன் வீடு வீடாக நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, அப்பகுதி மக்கள், அவருக்கு ஆரத்தி எடுத்தும், மலர்களை தூவியும் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது, வேட்பாளர் மலர்விழிகுமார் பேசுகையில், நான் வெற்றி பெற்றால் சாலை சீரமைப்பு, குடிநீர் வசதி, தெரு விளக்கு உள்பட அடிப்படை வசதிகளை முன்நின்று செய்து தருவேன். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கும் திட்டங்களை உடனுக்குடன் பெற்றுத் தருவேன். மருத்துவ சிகிச்சை முகாம், கால்நடை முகாம், மக்கள் குறைதீர்க்கும் முகாம் உள்பட அரசின் முகாம்களை ஏற்பாடு செய்து நடத்துவேன்.

மக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்களை உடனுக்குடன் பரிசீலனை செய்து தீர்வுக்கான  நடவடிக்கை எடுக்க பாடுபடுவேன். என்னை, உங்கள் வீட்டு பெண்ணாக கருதி உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பிரசாரத்தின்போது, மதுராந்தகம் திமுக நகர செயலாளரும் 2வது வார்டு திமுக வேட்பாளருமான கே.குமார் உள்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Madurantakam ,DMK ,Malarvizhi Kumar ,
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு