×

திருவட்டார் அருகே மாயமான இன்ஜி. மாணவர் உடல் குளச்சல் கடற்கரையில் மீட்பு

குளச்சல்,பிப். 12: திருவட்டார் அருகே மாயமான கல்லூரி மாணவர்  சடலம் குளச்சல் கடற்கரையில் மீட்கப்பட்டது. குமரி மாவட்டம் திருவட்டார்  அருகே கொல்வேல் பகுதியை சேர்ந்தவர் ஹரிலால் மூர்த்தி. வெளிநாட்டில் வேலை  பார்த்து வருகிறார். இவரது மகன் மிதுன் ஹரிலால் (22). கோவையில் உள்ள ஒரு  பொறியியல் கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வந்தார். கொரோனா பரவல் காரணமாக  வீட்டிலிருந்து ஆன்லைனில் பாடம் படித்து வந்தார். கடந்த 7ம் தேதி மதியம்  வீட்டிலிருந்து பைக்கில் வெளியே சென்ற மிதுன் ஹரிலால் வெகுநேரமாகியும்  வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் உறவினர், நண்பர்கள் வீடுகளில்  தேடியும் மாணவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து திருவட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து  மாணவரை தேடி வந்தனர். இந்நிலையில் அவரது பைக் குளச்சல் துறைமுக பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் பைக்கை மீட்டு காவல் நிலையம் கொண்டு  சென்றனர்.

உடனே உறவினர்கள் குளச்சல் கடற்கரை பகுதிக்கு விரைந்து  வந்து அந்த பகுதி முழுவதும் தேடினர். உள்ளூர் பொதுமக்களும் அவர்களுடன்  சேர்ந்து தேடினர்.இந்நிலையில் நேற்று காலை அவர்கள் தேடும்போது மாணவரின் செருப்பு  குளச்சல் சிங்காரவேலர் காலனி கடற்கரை அலை தடுப்பு சுவர் பகுதியில்  கிடந்தது. இதனை கண்ட உறவினர்கள் பதட்டமடைந்தனர். பின்னர் மாணவரின் உடல் அலை  தடுப்பு சுவர் கற்களுக்கு இடையே சிக்கியிருந்ததை கண்டுபிடித்தனர்.இதையடுத்து குளச்சல்  மரைன் சப் - இன்ஸ்பெக்டர் ஜாண் கிங்சிலி விரைந்து சென்று மீட்பு பணியில்  ஈடுபட்டார். கல் இடுக்குக்குள் உடல் சிக்கி கொண்டதால் கடலில் முத்து  குளிக்கும் வீரர்கள் உதவியுடன் உடலை மீட்கும் பணி நடந்தது. சுமார் 3  மணி நேரம் போராடி மாணவர் உடல் கல் இடுக்கிலிருந்து மீட்கப்பட்டது. பின்னர்  உறவினர்களால் அடையாளம் காணப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனக்கு அனுப்பி வைத்தனர். மாணவர் தற்கொலை செய்து  கொண்டதாக கூறப்படுகிறது. அவர் ஏன்? தற்கொலை செய்து கொண்டார் என்பது  குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Magical Eng ,Thiruvattar ,
× RELATED திருவட்டார் அருகே கல் ஏற்றி வந்த டெம்போ பறிமுதல்