பண்ருட்டி, பிப். 12: பண்ருட்டி நகராட்சி, தொரப்பாடி பேரூராட்சி ஆகிய இரு பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. வரும் 19ம் தேதி அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் ஆணையம் பறக்கும் படையினரை நியமித்துள்ளது. இதில் பண்ருட்டி நகராட்சி பகுதியில் பறக்கும் படை அலுவலர் தாசில்தார் தலைமையிலான குழுவினர் திருவதிகை ஹவுசிங் போர்டு பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி வந்த ஒரு பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் எவ்வித ஆவணமின்றி ரூ.90 ஆயிரத்தை எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அப்பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அதில் பைக்கில் வந்த நபர் திருக்கோவிலூரை சேர்ந்த முகமதுரபிக் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து பறிமுதல் செய்த பணத்தை பண்ருட்டி நகராட்சி தேர்தல் அலுவலர் மகேஸ்வரியிடம்
ஒப்படைத்தனர்.