×

(தி.மலை) 60 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் போளூர் அருகே பறக்கும்படை அதிரடி வெளிமாநிலங்களுக்கு வேனில் கடத்த முயன்ற

போளூர், பிப்.12: போளூர் அருகே வேனில் கடத்தி செல்லப்பட்ட 60 மூட்டை ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போளூர் தாலுகாவில் உள்ள ரேஷன் கடைகளில் ரேஷன் அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரர் பலர் அந்த அரிசியை கிலோ ₹10க்கு புரோக்கர்களிடம் விற்று விடுகின்றனர். அவர்கள் மொத்தமாக சேர்த்து ஆந்திராவிற்கு கடத்தி அதிக லாபம் சம்பாதிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் ரேஷன் அரிசி கடத்தபடுகிறதா என அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது திருவண்ணாமலை மாவட்ட வழங்கல் துறை பறக்கும் படை துணை தாசில்தார் ராஜேந்திரன் தலைமையிலான வருவாய்த்துறை மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் போளூரிலிருந்து வேலூர் நோக்கி சென்ற ஒரு சரக்கு வேனை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அதில் 60 மூட்டை ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வேனுடன் பறிமுதல் செய்தனர். அப்போது வேனில் இருந்த டிரைவர் ஆறுமுகம்(36), அமீர்(30) ஆகியோர் தப்பி செல்ல முயன்றனர். இதில் ஆறுமுகம் பிடிப்பட்டார். அமீர் தப்பியோடி விட்டார். இதுகுறித்து திருவண்ணாமலை குடிமைப்பொருள் மற்றும் குற்ற புலானாய்வு துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : T.Malai ,Flying Squadron ,Polur ,
× RELATED குழந்தை இல்லாததால் குடும்பத்தில்...