புதுக்கோட்டை, பிப்.12: புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பல்வேறு வகையான பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். பொதுவாக விவசாயிகள் ரசாயன உரங்களை அதிகம் பயன்படுத்துவதால் மண்வளம் பாதிக்கப்படுவதோடு மட்டுமின்றி, சுற்றுப்புற சூழலும் பாதிக்கப்படுகிறது. ஆனால், உயிர் உரங்களை பயன்படுத்துவதன் மூலம் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அதிகரித்து மண்வளம் பாதுகாக்கப்படுவதோடு, அதிக மகசூல் கிடைக்கவும் வாய்ப்பளிக்கிறது.மாவட்டத்தில் அன்னவாசல் வட்டாரத்தில் குடுமியான்மலையில் திரவ உயிர் உர உற்பத்தி மையம் இயங்கி வருகிறது. இங்கு ஆண்டுக்கு 50 ஆயிரம் லிட்டர் திரவ உயிர் உரங்கள் தயாரிக்கப்பட்டு புதுக்கோட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.