ராமநாதபுரம், பிப். 11: திருப்புல்லாணி அருகே காஞ்சிரங்குடியில் அட்மா திட்டத்தின் கீழ் நெற்பயிர் பண்ணை பள்ளி பயிற்சி நடந்தது. நெல் அறுவடை செய்தல், அறுவடைக்கு பின் நெல் மூட்டைகளை எடுக்கும் விதம், நெல் மூட்டைகளை தாக்கும் அந்து பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து ராமநாதபுரம் வேளாண் இணை இயக்குநர் டாம் பி சைலஸ் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். திருப்புல்லாணி வட்டாரத்தில் களரி, நல்லாங்குடி, மல்லல் ஆகிய இடங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் தொடங்கிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சம்பா ரக நெல் ரகங்கள் கிலோ ரூ.20.60 கொள்முதல் செய்யப்படும் எனவும், விருப்பமுள்ள விவசாயிகள் தங்களுக்கு அருகாமையில் உள்ள இ- சேவை மையங்களில் ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு அட்டை நகல், ரேஷன் கார்டு நகல் ஆகிய ஆவணங்களுடன் பதிவு செய்து பயனடையலாம் என வேளாண் துணை இயக்குநர் ஷேக் அப்துல்லா தெரிவித்தார். வேளாண் உதவி இயக்குநர் அமர்லால் நன்றி கூறினார். ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் பானுமதி, உதவி தொழில்நுட்ப மேலாளர் மாரீஸ்வரன், உதவி வேளாண் அலுவலர் முருகேசன் ஆகியோர் செய்திருந்தனர்.