கரூர், பிப். 11: மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் பதிவான வாக்குகளை எண்ணும் மையமான கரூர் தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரியில் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இதில், ஒரு வார்டில் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதால் 47 வார்டுகளில் வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் 19ம்தேதி அன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 22ம்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 47 வார்டுகளில் பதிவான வாக்குகள் அனைத்தும் தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரியில் எண்ணப்படவுள்ளன. இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் தடுப்புகள் அமைப்பது, கம்பி கட்டி தடுப்புகள் அமைப்பது போன்ற பணிகள் சில நாட்கள் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டு வருகின்றனர்.