×

கிருஷ்ணகிரிக்கு நாளை வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி வருகை

கிருஷ்ணகிரி, பிப்.10: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், வேலு நாச்சியார் அலங்கார ஊர்தி வருகை குறித்து முன்னேற்பாடு பணிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்து, ஆலோசனை நடத்தினார். பின்னர் இதுகுறித்து அவர் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு நாளை (11ம்தேதி) மாலை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி வருகை தர உள்ளது. இந்த அலங்கார ஊர்தி 20 அடி உயரமும், 15 அடி அகலமும், 40 அடி நீளம் கொண்ட அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை தீரமுடன் எதிர்கொண்ட தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை போற்றி பெருமைப்படுத்தும் வகையில் அரசின் சார்பில் வடிவமைக்கப்பட்ட வேலு நாச்சியார் ஊர்தி, வரும் 12ம் தேதி காலை 9 மணி முதல் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படவுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் கிராமப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. எனவே, பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு, அலங்கார ஊர்தியை கண்டு களித்திடலாம் என்றார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, பிஆர்ஓ மோகன் மற்றும் காவல்துறை, கலை பண்பாட்டுத்துறை, பொதுப்பணித்துறை, மின்சார துறை, போக்குவரத்து துறை, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Veeramangai Velunacharya ,Krishnagiri ,
× RELATED வறட்சியால் பாதிக்கப்பட்ட மாமரங்கள் கணக்கெடுப்பு