×

திருவையாறு அருகே கீழத்திருப்பந்துருத்தியில் தீ விபத்தில் 7 கூரை வீடுகள் எரிந்து சேதம்

திருவையாறு, பிப்.10: திருவையாறு அருகே கீழத்திருப்பந்துருத்தியில் தீ விபத்தில் 7 கூரை வீடுகள் எரிந்ததில் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானது.திருவையாறு அருகே கீழதிருப்பந்துருத்தி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி சின்னாத்தாள் (40). இவர் வசித்து வரும் கூரை வீட்டில் மின்கசிவால் தீ பிடித்தது. மேலும் மளமளவென தீ பரவி அதே தெருவில் உள்ள தர்மர் மகன் ராஜா (42), சுந்தரமூர்த்தி மகன் மொட்டையாண்டி (55), சக்திவேல் மனைவி உமா மகேஸ்வரி (38), மொட்டையாண்டி மகன் சதீஷ்குமார் (37), நடராஜன் மகன் அசோக் (40), தங்கவேல் மகன் முருகேசன் (45) ஆகியோரின் 7 கூரை வீடுகள் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த துணிமணிகள், பாத்திரங்கள், பீரோ, கட்டில், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து சேதமானது.

இதன் மதிப்பு சுமார் ரூ.4 லட்சம் இருக்கும். தகவல் அறிந்த திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர்கள் ஜெயக்குமார், சீனிவாசன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை மேலும் பரவாமல் அணைத்தனர்.
மேலும் தகவல் அறிந்தவுடன் திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியன், ஒன்றியக்குழு தலைவர் அரசாபகரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாச்சலம், ஒன்றிய கவுன்சிலர் ஜெயசீலன், ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி, ஆர்.ஐ. மஞ்சு, விஏஓ நான்சி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.மேலும் நடுக்காவேரி போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 7 வீடுகள் எரிந்தபோது வீட்டில் இருந்தவர்கள் பணிக்கு சென்றதாலும், குழந்தைகள் பள்ளிக்குச் சென்று விட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

Tags : Keelathiruppanthuruthy ,Thiruvaiyaru ,
× RELATED வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைப்பு:...