×

புதுச்சேரி அருகே சோகம் போர்வெல் குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாப பலி ஆரோவில் போலீசார் விசாரணை

வில்லியனூர், பிப். 9: விழுப்புரம் அருகே ஆழ்துளை கிணறுக்காக அமைக்கப்பட்ட குட்டையில் விழுந்து இரண்டு சிறுவர்கள் பரிதாபகரமாக இறந்தது  அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், பெரம்பை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் என்கிற ராமு(33). கொத்தனார். இவரது மனைவி வினிதா (29). இவர்களுக்கு லெவின் (4), லோகித் (3) ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர். அப்பகுதியில் உள்ள மனைப்பிரிவு ஒன்றில் ஆழ்துளை கிணறு அமைக்கும்போது, வெளியேறும் சேறும், தண்ணீரும் கலந்த கலவை வேறு எங்கும் ஓடக்கூடாது என்பதற்காக குட்டை தோண்டி அதில் நிரப்பியுள்ளனர். பணிகள் முடிவடைந்தவுடன் குட்டையை மூடிவிட வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை எனத்தெரிகிறது. இதனால் அதில் சுமார் 4 அடிக்கு மேல் சேறும் சகதியும் நிரம்பியிருந்தது. இந்நிலையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் குட்டை அமைந்துள்ள மனைப்பிரிவில் ராமுவின் இரண்டு குழந்தைகளும் விளையாடிக்கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீர் நிரம்பிய குட்டையில் தவறி விழுந்துள்ளனர்.

அப்போது சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் ஓடிவந்து இருவரையும் மீட்டு அருகில் உள்ள வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் மூச்சு திணறி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையறிந்து மருத்துவமனைக்கு ஓடிவந்த பெற்றோர்கள், உறவினர்கள் குழந்தைகளின் சடலத்தை வைத்துக்கொண்டு கட்டி தழுவி கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இதனால் மருத்துவமனை வளாகமே சோகத்தில் மூழ்கியது. தகவலறிந்த கோட்டக்குப்பம் டிஎஸ்பி அருள், ஆரோவில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், விஜயக்குமார் உள்ளிட்ட போலீசார் மருத்துவமனைக்கு வந்து நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து இரண்டு சிறுவர்களின் உடலையும் மீட்டு கதிர்காமம் அரசு பொதுமருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு  அனுப்பி வைத்தனர். ஆரோவில் போலீசார் வழக்கு பதிந்து மனைப்பிரிவில் போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு அனுமதி பெற்றுள்ளதா? அந்த மனைப்பிரிவு யாருடையது, அந்த குட்டையை ஏன் பணி முடிந்தும் மூடவில்ைல.குழந்தையுடன் யார்? சென்றார்கள் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Borwell pond ,Pondicherry ,
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...