×

மன்னார்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த முதியவரை தாக்கி ரூ.40 ஆயிரம் திருட்டு

மன்னார்குடி, பிப். 9: மன்னார்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த முதியவரை தாக்கி ரூ.40 ஆயிரத்தை திருடி சென்ற 3 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த பரவாக்கோட்டை மேலத்தெரு ஓஎன்ஜிசி ரோட்டை சேர்ந்தவர் நடேசன்(64). இவருக்கு சந்திரா என்ற மனைவியும், மாணிக்கவாசகம் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். இதில் மாணிக்கவாசகம் குடும்பத்தோடு சிங்கப்பூரிலும், மகள் சுதா குடும்பத்தோடு அபுதாபியிலும் வசித்து வருகின்றனர்.இதில், சந்திரா வெளிநாட்டில் உள்ள தனது மகள் சுதா வீட்டில் கடந்த 6 மாதமாக வசித்து வருகிறார். இதனால் நடேசன் மட்டும் பரவாக்கோட்டையில் தனியாக வசித்து வந்தார். சிங்கப்பூரில் வசிக்கும் மகன் தனது தந்தையின் பாதுகாப்புக்காக வீட்டில் ஏராளமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொறுத்தி அதில் பதிவாகும் காட்சிகளை தனது செல்போனில் அவ்வப்போது பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் நடேசன் வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு வீட்டில் டிவி பார்த்துள்ளார். அப்போது பனிக்குல்லா அணிந்த 3 மர்ம நபர்கள் வீட்டுக்குள் நுழைந்து நடேசனை சரமாரி தாக்கினர். அதில் ஒருவன் பீரோ சாவியை கேட்டதாகவும், மேலும், மேஜை மீது வைத்திருந்த ரூ.40 ஆயிரம் ரொக்க பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.அப்போது, சிங்கப்பூரில் வசிக்கும் மணிக்கவாசகம் எதேச்சையாக தன் செல் போன் மூலம் பரவாக்கோட்டை வீட்டை பார்த்தபோது தனது தந்தையை 3 மர்ம நபர்கள் தாக்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக ஊரில் உள்ள உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் போன் மூலம் தகவல் கொடுத்தார். இதையடுத்து, அவர்கள் நடேசன் வீட்டுக்கு விரைந்து வந்ததை கண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதில் மர்ம நபர்கள் தாக்கியதில் மயங்கி கிடந்த நடேசனை உறவினர்கள் மீட்டு மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேற் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தகவலறிந்த மன்னார்குடி டிஎஸ்பி பாலச்சந்தர், பரவாக்கோட்டை இன்ஸ்பெக்டர் (பொ) விஸ்வநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வீட்டை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். திருவாரூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து பரவாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.நடேசனுக்கு பரவாக்கோட்டை மற்றும் மன்னார்குடியில் ஏராளமான சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் ஏதேனும் முன்விரோதம் ஏற்பட்டு அதன் காரணமாக தாக்கப்பட்டாரா அல்லது தனியாக வசித்து வந்ததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கொள்ளையடிக்க வந்தபோது தாக்கப்பட்டாரா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.

Tags : Mannargudi ,
× RELATED பறக்கும்படை சோதனையில் ரூ.64,390 பறிமுதல்