×

சென்னை குடியரசு தினவிழாவில் பங்கேற்ற விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பைப் போற்றும் அலங்கார ஊர்திகள் திருச்சியில் இன்று மாலைவரை பொதுமக்கள் பார்வையிடலாம்


திருச்சி, பிப்.8: திருச்சி சத்திரம் பஸ்நிலையம் காமராஜர் சிலை அருகில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சென்னை குடியரசு தினவிழாவில் பங்கேற்ற விடுதலைப்போரில் தமிழகத்தின் பங்களிப்பை போற்றும் இரண்டு அலங்கார ஊர்திகளை பொதுமக்கள் இன்று மாலைவரை பார்வையிடலாம். சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில், விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பை போற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டு இரண்டு அலங்கார ஊர்திகள் பங்கேற்றது. இந்த அலங்கார ஊர்திகள் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு காட்சிப்படுத்தப்படுகிறது. அதன்படி இந்த அலங்கார ஊர்தி திருச்சி சத்திரம் பேருந்து நிலையப்பகுதியில் காமராஜர் சிலை அருகில் உள்ள மைதானத்தில் மக்கள் பார்வைக்கு நேற்றுமுன்தினம் மாலை காட்சிப்படுத்துவதற்காக வந்தது. இதனை மாவட்ட கலெக்டர் சிவராசு வரவேற்று பார்வையிட்டார்.

இந்த இரண்டு அலங்கார ஊர்திகளில் ஒன்றில் மகாகவி பாரதியார், செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரனார், தியாகி சுப்பிரமணிய சிவா, தியாகி சேலம் விஜயராகவாச்சாரியார் ஆகிய தலைவர்களின் திருவுருவச்சிலைகளும், மற்றொரு அலங்கார ஊர்தியில் தந்தை பெரியார், மூதறிஞர் ராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், கர்மவீரர் காமராஜர், சமூக சீர்திருத்தச் செயற்பாட்டாளர் ரெட்டமலை சீனிவாசன், வீரன் வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, கொடிகாத்த திருப்பூர் குமரன், தியாகி வ.வே.சு.அய்யர், கண்ணியமிகு காயிதே மில்லத், அண்ணல் காந்தியடிகளின் பொருளாதாரப் பேராசிரியராகவும் சிறைத்தண்டனை பெற்றவருமான தஞ்சாவூர் ஜோசப் கொர்னேலியஸ் செல்லதுரை குமரப்பா, தியாகசீலர் கக்கன் ஆகிய தலைவர்களின் திருவுருவச்சிலைகள் இடம் பெற்றுள்ளன.

இந்த இரண்டு அலங்கார ஊர்திகளும், இன்று (8ம் தேதி) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிவரை திருச்சி சத்திரம் பேருந்து நிலையப்பகுதியில் காமராஜர் சிலை அருகில் உள்ள மைதானத்தில் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படுகிறது. இன்று காலை முதல் தொடர்ந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளளது. இதனை பொதுமக்கள் வருகை தந்து பார்வையிடலாம் என கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : Thiruchi ,Tamil Nadu ,Republic of Chennai Day ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...