சென்னை: சென்னை மாநகராட்சி தி.நகர் தொகுதிக்குட்பட்ட 141 வது வார்டில் திமுக வேட்பாளராக போட்டியிடும் ராஜா அன்பழகனை ஆதரித்து கூட்டணி கட்சியினரின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில், பேசிய தென்சென்னை தென்மேற்கு மாவட்ட பொறுப்பாளரும் மயிலாப்பூர் எம்எல்ஏவுமான மயிலை த.வேலு பேசுகையில், ‘கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது போல இந்த மாமன்ற தேர்தலிலும் எனது தொகுதிக்குட்பட்ட 14 வார்டுகளிலும் திமுக வேட்பாளர்கள், கூட்டணியில் உள்ள தோழமை கட்சி வேட்பாளர்களும் வெற்றி பெற்றார்கள் என்ற நிலையை உருவாக்க வேண்டும். 141வது வார்டில் போட்டியிடும் ராஜா அன்பழகனின் வெற்றிக்காக நாம் அனைவரும் பாடுபட வேண்டும்’ என்றார்.
தி.நகர் எம்எல்ஏ கருணாநிதி பேசுகையில், ‘‘141வது வார்டு திமுகவின் கோட்டை. நாம் தி.நகர் தொகுதிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் நிச்சயம் வெற்றி பெறுவோம். குறிப்பாக 141வது வார்டில் போட்டியிடும் ராஜா அன்பழகன் 5 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்து கூறி மக்களை நேரடியாக சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும் இந்த பகுதியில் நலத்திட்ட உதவிகள் நேரடியாக மக்களிடம் சென்றடைய ராஜா அன்பழகன் வெற்றி அடைய செய்ய வேண்டும்’’ என்றார். உடன் மாவட்ட பிரதிநிதி ெஜ.ஜானகிராமன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து வேட்பாளர் ராஜா அன்பழகன், திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டா லினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.