ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலத்திற்கு உட்பட்ட 186வது வார்டில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளராக போட்டியிடும் ஜெ.கே.மணிகண்டன், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், உள்ளகரம் பகுதியில் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில், வட்ட பொறுப்பாளர் குமாரசாமி தலைமை வகித்தார். வழக்கறிஞர் கமலநாதன், ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், திமுக வேட்பாளர் ஜெ.கே.மணிகண்டன் பங்கேற்று பேசுகையில், ‘‘186வது வார்டு திமுக வேட்பாளராக போட்டியிடும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும். என்னை வெற்றிபெற செய்தால், மாநகராட்சியில் முதன்மை வார்டாக 186வது வார்டை மாற்றுவேன். உங்கள் குறைகளை உடனுக்குடன் சரி செய்வேன். பிரச்னைகள் விரைந்து தீர்ப்பேன். பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதுடன், வளர்ச்சி திட்ட பணிகளை சிறப்பாக மேற்கொள்வேன். எனவே, திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தீவிர களப்பணியாற்றி என்னை வெற்றிபெற செய்ய வேண்டும்,’’ என்றார். கூட்டத்தில் வட்ட நிர்வாகிகள் லட்சுமணன், சரவணன் கோட்டீஸ்வரன், மகேஸ்வரன், குபேரா யோகராஜன், மணிகண்டன், ஜவகர், பி.எம்.தினேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.