காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏலவார் குழலி சமேத ஏகாம்பரநாதர் கோயில் பிரமோற்சவம் இன்று தொடங்குகிறது. இதை முன்னிட்டு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருக்கல்யாணம் நடத்தப்படுவது வழக்கம். இதை தொடர்ந்து, இந்தாண்டு திருவிழா வரும் மார்ச் 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு கோயிலில் உள்ள ராஜகோபுர விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நேற்று நடந்தன. தொடர்ந்து, இதனையடுத்து பந்தக்கால்களுக்கு கலச அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளும் நடத்தி, பந்தக்கால்கள் ஆலயத்தின் முன்பாக நடப்பட்டன.
இதில் கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன், சிவனடியார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாணப் பெருவிழா இன்று தொடங்கி தினமும் காலை, மாலை வேளைகளில் ஏகாம்பரநாதர், ஏலவார் குழலி அம்மனுக்கு சிறப்பு ஆராதனை செய்து, பல்வேறு வாகனங்களில் அலங்காரித்து, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். வரும் 11ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்திலும்,12ம் தேதி அதிகார நந்தி வாகன வீதியுலா, 13ம் தேதி 63 நாயன்மார்கள் புறப்பாடு, அன்று இரவு வெள்ளி ரதம் வீதியுலா, 14ம் தேதி தேரோட்டம். 16ம் தேதி கோயிலின் வரலாற்றை விளக்கும் மாவடி சேவை, 18ம் தேதி அதிகாலையில் திருக்கல்யாணம் நடக்க உள்ளது. இதையடுத்து 20ம் தேதி தீர்த்தவாரியுடன் பிரமோத்சவம் நிறைவு பெறுகிறது.