×

புதூர் அய்யனாபுரம் சாலையில் வடிகால் பாலத்தில் திடீர் மெகா பள்ளம்

வல்லம்,பிப்.4: பூதலூர் அய்யனாபுரம் சாலை காமராஜர் தெரு, கூட்டுறவு காலனி பகுதிக்கு செல்லும் வடிகால் பாலத்தில் மெகா பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பாலத்தை உடன் சீரமைத்து சாலையை புதிதாக அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாவட்டம் பூதலூர் அய்யனாபுரம் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இதன் அருகே காமராஜர் தெரு, கூட்டுறவு காலனி, ஜான்சி நகர் உட்பட பல்வேறு குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இந்த பாதையில் வடிகால் பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் ஒரு பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்தது. நாளாக நாளாக பெரிய அளவில் பள்ளமாக மாறிவிட்டது. இதனால் இரவு நேரங்களில் இந்த பாதை வழியாக வீட்டுக்கு செல்பவர்கள் தடுமாறி விழும் நிலை உள்ளது. மேலும் மழைக்காலங்களில் இந்த வடிகால் பாலத்தில் தண்ணீர் தேங்கி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இந்த வடிகால் பாலத்தை சீரமைத்து தெரு சாலையையும் புதிதாக மாற்றித்தர வேண்டும். இதுகுறித்து பல முறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Puthur Ayyanapuram road ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு