சுசீந்திரம், பிப்.4: சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் புதிய சண்டிகேஸ்வரர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில், தெற்கு நோக்கி இருக்கும் சண்டிகேஸ்வரர் சிலை 3 ஆண்டுகளுக்கு முன்பு கழுத்து பகுதியில் சேதமடைந்தது. இதனால் பூஜைகள் நடக்காமல் இருந்தது. சேதமடைந்த சிலையை மாற்றி புதிய சிலையை நிறுவ வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மயிலாடி பகுதியில் புதிய சிலை செய்யப்பட்டு, கடந்த 21ம் தேதி தாணுமாலயன் சுவாமி கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. புதிய சிலைக்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் புதிய சுவாமி சிலையை பிரதிஷ்டை செய்வதற்காக மணலிக்கரை மட ஸ்தானிகர் சஜித் சங்கரநாராயணரு தலைமையில் தெற்கு மண் மட ஸ்தானிகர் திலீப், வட்டபள்ளி மட ஸ்தானிகர் டாக்டர் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் பூஜைகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து நேற்று சண்டிகேஸ்வரர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. முன்னதாக அதிகாலை கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து பீட பிரதிஷ்டையும், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 10 மணிக்கு மேல் முகூர்த்த தானம் செய்யப்பட்டது. பின்னர் மருந்து சாத்துதல் நடந்தது. அதன் பிறகு சுவாமி சிலையை பிரதிஷ்டை செய்தனர். பின்னர் சுவாமிக்கு கும்ப அபிஷேகம், ெதாடர்ந்து அலங்கார பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்டதிருக்கோயில் இணை ஆணையர் ஞான சேகர் தலைமையில் கண்காணிப்பாளர் சிவகுமார், கோயில் ேமலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன், திருக்கோயில் பணியாளர்கள், தாணுமாலயன் சுவாமி பக்தர்கள் செய்திருந்தனர். இதற்கிடையே திருநெல்வேலி துணை ஆணையர், நகை சரிபார்க்கும் அதிகாரி சங்கர் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் முன்பு பரிகார பூஜைகள் செய்யப்பட்ட பழைய சண்டிகேஸ்வரர் சிலை அகற்றும் பணி நடந்தது. அந்த சிலை தற்போது நாகர்கோவில் நாகராஜா கோயிலில் உள்ள சிலை பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.