×

தொழிலதிபர் வீட்டில் 35 சவரன் கொள்ளை; புளியந்தோப்பில் பதுங்கியிருந்த உறவினர் உட்பட 3 பேர் கைது

தண்டையார்பேட்டை: தொழிலதிபர் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடித்த உறவினர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். பிராட்வே ஆச்சாரப்பன் தெருவை சேர்ந்தவர் கோவர்தன். தொழிலதிபர். அதே பகுதி சாட்டர்ன் முத்தையா தெருவில் எலக்ட்ரிக் கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். கடந்த வாரம் சொந்த ஊரான ராஜஸ்தானுக்கு கோவர்தனும், அவரது மனைவியும் சென்றனர். எலக்ட்ரிக் கடையை மகன்களான நந்திஸ்(18), ராகேஷ்(20) ஆகியோர் கவனித்து வருகின்றனர். இரு தினங்களுக்கு முன் அண்ணன், தம்பி இருவரும் கடையில் வியாபாரத்தை கவனித்துகொள்ள சென்றனர். பின்னர், வியாபாரம் முடிந்து இருவரும் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு 35 சவரன் தங்க நகை மற்றும் ₹4.5 லட்சம் ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது.

புகாரின்பேரில், எஸ்பினேடு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா மூலம் குற்றவாளிகளை தேடி வந்தனர். இதனிடையே, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளை குறித்து விசாரித்தபோது, கோவர்த்தனின் உறவினரும், எலக்ட்ரிக் கடையில் வேலை செய்து வந்த ஊழியர்கள் 2 பேர் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதனிடையே, புளியந்தோப்பு பட்டாளம் பகுதியில் குற்றவாளிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் வீட்டில் பதுங்கியிருந்த 3 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில், கோவர்த்தனின் உறவினர் ராகேஷ்(23), ஊழியர்கள் தினேஷ்(24), சென்னாராம்(32) என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. தப்பிய கூட்டாளிகள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Puliyanthope ,
× RELATED புளியந்தோப்பில் அதிகாலை பரபரப்பு...