×

பாபநாசம் அருகே பெருமாங்குடியில் முன்னாள் எம்எல்ஏ மகன் வீட்டில் நகை திருட்டு மர்மநபர்களுக்கு வலை

கும்பகோணம், பிப்.2: கும்பகோணம் அருகே பாபநாசம் முன்னாள் எம்எல்ஏ மகன் வீட்டில் நகை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். பாபநாசம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் பெருமாங்குடியைச் சேர்ந்த வெங்கடாஜலம். இவர் கடந்த 1957 முதல் 1962 வரை எம்எல்ஏ வாக பணியாற்றியவர். இவருடைய மகன் நடராஜன் (63). ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியர். இவருக்கு பாபநாசம் அருகே பெருமாங்குடி குடியான தெருவில் வீடு உள்ளது. இவர் தனது வீட்டை பூட்டி விட்டு தஞ்சாவூர் சென்று அங்குள்ள அவரது வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பெருமாங்குடியில் உள்ள அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.

உடனே தஞ்சையிலிருந்து நடராஜன் வீட்டில் வந்து பார்க்கும் பொழுது வீட்டினுள்ளே சாமி அறையில் வைத்திருந்த குலதெய்வ நகை, காசு மாலை, 3 பவுன் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இதனுடைய மதிப்பு ரூ.45 ஆயிரம் ஆகும். இதனால் அதிர்ச்சி அடைந்த நடராஜன் பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பாபநாசம் இன்ஸ்பெக்டர் அழகம்மாள், எஸ்ஐ இளமாறன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு திருட்டு வழக்கு பதிவு செய்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சையில் இருந்து கைரேகை நிபுணர் எஸ்ஐ சிலம்பரசன் நகை திருட்டு நடந்த வீட்டில் கைரேகை சோதனையில் ஈடுபட்டார்.

Tags : MLA ,Perumangudi ,Papanasam ,
× RELATED அதிமுக மாஜி எம்எல்ஏ காரில் சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்