×

சங்கரன்கோவில் அருகே திருமணம் செய்ய மறுத்து காதலி, தாய் மீது தாக்குதல்

சங்கரன்கோவில், பிப். 1:  சங்கரன்கோவில் அருகே திருமணம் செய்ய மறுத்து காதலியையும், அவரது தாயையும் தாக்கிய காவலர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தென்காசி மாவட்டம், குருவிகுளம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் வைரமுத்து. இவர் சங்கரன்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வைரமுத்துவிடம் கூறியபோது அவர் பதில் சொல்லாமல் காலம் கடத்தி வந்துள்ளார். இதனால் அந்த பெண், சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கூறினார். போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து ஒரு வாரத்துக்குள் திருமணம் செய்து கொள்வதாக வைரமுத்து தரப்பினர் கூறியுள்ளனர்.

ஆனால் ஒரு வாரமாகியும் திருமண ஏற்பாடுகள் நடைபெறாததால் அந்த பெண் தனது தாயுடன் வைரமுத்து வீட்டிற்கு சென்று கேட்டுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே வைரமுத்து தரப்பினர், அந்த பெண்ணையும், அவரது தாயையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் இந்த தகராறில் பெண்ணின் தாய் காயமடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வைரமுத்து, அவரது உறவினர்கள் மாரிசாமி, கன்னியப்பன், தமிழ்செல்வி, சந்திரா, கன்னியம்மாள் ஆகிய 6 பேர் மீது கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Sankarankoil ,
× RELATED தென்காசி சங்கரன்கோவிலில் ஓட்டுநர்...