கும்பகோணம், பிப்.01: கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் ஒன்றியம் கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தான் கோயில் மகா கும்பாபிஷேக பூர்வாங்க பூஜையில் உலக நலன் வேண்டியும், நோய் தொற்று அச்சம் விலகவும் தன்வந்திரி ஹோமம் நடந்தது. கோயில் ஸ்தாபகர் பிரம்ம விட்டல்தாஸ் மஹராஜ் முன்னிலையில் 250 வேத பண்டிதர்கள் வேத கோஷத்துடன் பலவிதமான மூலிகைகளைக் கொண்டு சிறப்பு ஹோமம் செய்வித்தனர். மஹா பூர்ணாஹுதி செய்வித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இதில் பேரூர் ஆதீனம் 24வது குருமகாசந்நிதானம் சீர்வளர்சீர் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ராமானந்த குமரகுருபர சுவாமிகள் உள்ளிட்ட ஆதீனங்கள் கலந்து கொண்டனர்.