கரூர், பிப்.1: தை அமாவாசையை முன்னிட்டு கரூர் மாவட்டம் நெரூர் காவிரி ஆற்றில் நேற்று ஏராளமானோர் முன்னோர்களுக்கு திதி கொடுத்துச் சென்றனர். கரூர் மாவட்டம் நெரூர், வாங்கல், தவிட்டுப்பாளையம், மாயனூர், குளித்தலை ஆகிய பகுதிகளின் வழியாக காவிரி ஆறு திருச்சி நோக்கி பயணிக்கிறது. ஆண்டுதோறும் ஆடி, புரட்டாசி மற்றும் தை அமாவாசை நாட்களில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் வகையில், அதிகாலையில் ஆற்றுப்பகுதிக்கு சென்று, சுவாமி தரிசனம் செய்து, புரோகிதர்கள் மூலம் தர்ப்பணம் கொடுத்துச் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதன்படி, நேற்று தை அமாவாசை என்பதால் நேற்று காலை முதல் மதியம் வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் நெரூர் போன்ற காவரி ஆற்றுப்பகுதிக்கு சென்று படைப்புகள் வைத்து, முன்னோர்களுக்கு திதி கொடுத்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.