தேனி: தேனி அருகே, வாடகைக்கு விடுவதாக ஜேசிபி விற்று மோசடி செய்தது தொடர்பாக 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். தேனி அருகே உள்ள ஏ.வலையபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆண்டி. இவருக்கு சொந்தமான ஜேசிபி வாகனத்தை தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரைச் சேர்ந்த எசக்கிபாண்டிக்கு வாடகைக்கு விடலாம் என கம்பத்தை சேர்ந்த ராசையா மகன் முகுந்தன், எடுத்துச் சென்றுள்ளார். பின்னர் வாகனத்தின் பதிவு எண்ணை மாற்றி, ஆண்டிக்கு தெரியாமல் விற்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆண்டி பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார்.
இதன்பேரில், போலீசார் கம்பத்தை சேர்ந்த ராசையா மகன் முகுந்தன், கடம்பூரைச் சேர்ந்த எசக்கிபாண்டி, குருநாதபாண்டி மகன் மாருதி கார்த்திகேயன், கன்னியாகுமரி மாவட்டம், காவல்கிணறை சேர்ந்த ஞானதிரவியம் மகன் மாரியப்பன், அதே ஊரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ராஜ்குமார் ஆகியோர் மீது, போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.