×

வத்தலக்குண்டுவில் 2 கடைகளை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை

வத்தலக்குண்டு, ஜன. 29: வத்தலக்குண்டுவில் இரண்டு கடைகளை உடைத்து 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வத்தலக்குண்டு கடைவீதியில் தேவதானப்பட்டியை சேர்ந்த ஜாபர்சாதிக் செல்போன் கடை வைத்துள்ளார். இவர் நேற்று காலை வழக்கம் போல் கடையைத் திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஷட்டரை திறந்து உள்ளே பார்த்தபோது ரூ. 1 லட்சத்தி 70 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்கள் மற்றும் கல்லாவில் இருந்த  பதினைந்தாயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதேபோல வத்தலக்குண்டு - மதுரைச்சாலையில் ஒரு செல்போன் கடையில் ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான செல்போன்கள் பூட்டை உடைத்து கொள்ளயடிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வத்தலக்குண்டு காவல்நிலையத்தில் இரண்டு செல்போன் கடைக்காரர்களும் புகாரளித்தனர். அதன் பேரில் வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். திண்டுக்கல்லிருந்து கைரேகை நிபுணர் வந்து கைரேகைகள பதிவு செய்தார். செல்போன் கொள்ளை சம்பவங்கள் வத்தலக்குண்டுவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Vattalakundu ,
× RELATED வத்தலக்குண்டுவில் அரசு மருத்துவமனையை...