காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் அமரம்பேடு, கோவூர், கெருகம்பாக்கம், சிக்கராயபுரம் ஆகிய ஊராட்சிகளில் கணக்கெடுப்பு குழுவினரால் இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட செயலி மூலம் மறு கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பணிகளை கலெக்டர் ஆர்த்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 4,485, உத்திரமேரூரில் 6,371, வாலாஜாபாத்தில் 5,024, பெரும்புதூரில் 4,564, குன்றத்தூரில் 7,838 பேர் என காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் மூலம் ஏற்கனவே 28,282 வீடுகள் கணக்கு எடுக்கப்பட்டுள்ளன.
தற்போது கணக்கெடுப்பு பணி குழுக்கள் மூலம், மீண்டும் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. இதில் ஊராட்சி செயலர், வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர் என 2 பேர் கொண்ட 293 கணக்கெடுப்பு குழுக்கள், இப்பணிகளை மேற்பார்வையிட 225 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த கணக்கெடுக்கும் பணியை கலெக்டர் ஆர்த்தி நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவி உள்பட பலர் இருந்தனர்.