கடலூர், ஜன. 25: கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மழை பெய்தது. கடலூரில் கடந்த சில நாட்களாக அதிகாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும் அதிகாலை நேரத்தில் வாகனங்களில் செல்வோர் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதையடுத்து பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வந்தது. மேலும் மாலை நேரங்களில் குளிர்ந்த காற்று வீசியது. இந்நிலையில் நேற்று காலை நேரத்தில் கடலூரில் வெயில் அடித்தது. இதையடுத்து நண்பகல் 12 மணி முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து 1 மணியளவில் கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக பெய்ய தொடங்கியது. இந்த திடீர் மழையால் வாகனங்களில் சென்றவர்கள் மற்றும் பாதசாரிகள் மழையில் நனைந்தபடியே சென்றனர். இந்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இந்த மழையால் சாலையில் இருந்த பள்ளங்களிலும், தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நின்றது.