×

தலை பாகத்தை ஒப்படைக்கவில்லை எனவும் புகார் போலீஸ்காரர் ஜெகநாதன் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்

நாகர்கோவில், ஜன.25: 10 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த போலீஸ்காரர் ஜெகநாதன் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கேட்டு அவரது மனைவி நேற்று கலெக்டரிடம் மனு அளித்தார். நாகர்கோவில் இடலாக்குடி மேல சரக்கல்விளை பகுதியை சேர்ந்த தங்கம் என்பவர் குமரி மாவட்ட கலெக்டரிடம் நேற்று அளித்த மனுவில் கூறி இருப்பதாவது: எனது கணவர் ஜெகநாதன், களக்காடு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார்.  கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி எனது மாமியார் வீட்டில் வைத்து அவரை அழைத்து சென்றவர்கள் கொலை செய்துள்ளனர். இந்த கொலையை குடிபோதையில் தான் செய்தோம் என்று அந்த ரவுடிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதை என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த கொலை சிலரது கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்துள்ளது.  நான் கலெக்டர் ஆபீஸ், எஸ்.பி ஆபீஸ் என்று பல இடங்களில் அலைந்து பல போராட்டங்களுக்கு பிறகு தான் இறந்தது எனது கணவர் என மருத்துவ பரிசோதனை மூலம் கண்டு பிடிக்கப்பட்டது.

ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தின் அப்போதைய இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் ‘இறந்து போனது உனது கணவர் இல்லை, இது ஒருவருடைய உடல் பாகம்’ என எங்களிடம் கூறி கொலை வழக்கையே திசை திருப்பி விட்டார்.   பின்னர் ‘மேன் மிஸ்ஸிங்’ மட்டும் என வழக்குப்பதிவு செய்து வழக்கை முடிப்பதற்காக எனது கணவர் உடல் பாகத்தை மீட்டு இருந்தனர். நான் கோர்ட்டில் இந்த வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி இருந்த நிலையில் பெயருக்கு மட்டும் கொலை வழக்கினை பதிவு செய்துவிட்டு அப்படியே வழக்கை கிடப்பில் போட்டு விட்டனர்.

எனது கணவர் இறந்து பத்து ஆண்டுகள் ஆகிறது.  இதுவரை கொலையாளிகளுக்கு சமன் கொடுக்கவோ, ஒருமுறைகூட வழக்கு விசாரணைக்கு அழைக்கவோ செய்யவில்லை. திட்டமிட்டு இந்த வழக்கை கிடப்பில் போட்டுள்ளனர். எனவே எனது கணவரின் கொலையில் மர்மம் நிறைந்துள்ளது. இந்த கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்.  பத்து வருடம் கடந்த நிலையிலும் எனது கணவரின் தலைப்பாகம் என்னிடம் ஒப்படைக்கப்பட வில்லை.  எனவே எனது கணவரின் தலை பாகமும் என்னிடம் ஒப்படைக்க வேண்டும். அதனை எனது கணவர் ஊரில் அவரது இடத்தில் அடக்கம் செய்வதற்கு எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags : CBI ,Jagannathan ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...