கமுதி, ஜன. 22: கமுதி அடுத்துள்ள வங்காருபுரம் பஸ்நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் மாலை அபிராமம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து ஆட்டோவில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் வீரசோழன் கிராமத்தை சேர்ந்த அப்துல்ரஹீம்(33), முகமதுபரூக் என்பது தெரிந்தது. பின்னர் போலீசார் ஆட்டோவை சோதனை நடத்தியதில் தடை செய்யப்பட்ட 40 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இவற்றை அபிராமத்திலிருந்து பார்த்திபனூருக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து, புகையிலை பொருட்கள் மற்றும் அவர்களிடமிருந்த ரூ.46,900 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.