×

மாநகராட்சி பகுதிகளில் 212 மையங்களில் இன்று 19வது மெகா தடுப்பூசி முகாம்

கோவை, ஜன. 22:   கோவை மாநகராட்சி பகுதிகளில் கோவிட் -19 19வது மெகா தடுப்பூசி முகாம்  212 மையங்களில் இன்று நடைபெறுகிறது என கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:  கோவை மாநகராட்சி பகுதியில் கோவிட் 19வது மெகா தடுப்பூசி முகாம் 212 மையங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. கோவை மாநகராட்சிப் பகுதிகளில் 94 சதவீதத்திற்கு மேல் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். கோவை மாநகராட்சி பகுதிகளில் 18 வயதிற்கு மேல் 1 லட்சத்து 8 ஆயிரம் நபர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர். எனவே இந்த தடுப்பூசி முகாமை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும். இது தவிர 2 லட்சத்து 13 ஆயிரம் நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியுடையவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

தியேட்டர்கள், மால்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் பொது இடங்களில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி இரண்டாம் தவணை செலுத்த நாட்கள் முடிவடையாதவர்கள் மற்றும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல, ஒமிக்ரான் என்ற உருமாறிய கொரோனா வைரஸ் அதிக வீரியமுடையதாகவும் வேகமாக பரவும் தன்மையுடையதாகவும் உள்ளது. எனவே, வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு தங்களது வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். கடந்த 3 மாதங்களில் இறந்தவர்களில் 95 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தாதவர்கள் ஆகும். மேலும், நாளொன்றுக்கு கொரோனா பாதிப்பு இரு மடங்கு அதிகமாக இருப்பதால் இந்த வைரஸ் தொற்றிலிருந்து தங்களை முழுவதும் பாதுகாத்துக்கொள்ள முதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களும் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த தகுதியுடையவர்கள் அனைவரும் 100 சதவீத பாதுகாப்பை பெற முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : 19th Mega Vaccine Camp ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...