விராலிமலை, ஜன.22: இல்லம் தேடி கல்வி தொடக்க விழாவில் புரவலர் நிதி வழங்கிய கொத்தமங்கலப்பட்டி அரசுப் பள்ளி ஆசிரியர்களை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.அன்னவாசல் ஒன்றியம் கொத்தமங்கலப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்ட மைய தொடக்க விழா பள்ளி தலைமை ஆசிரியர் சரோஜா தலைமையில் நேற்று நடந்தது. இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியசாமி, ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில், ஆனந்தராஜன் ஆகியோர் திட்டத்தின் நோக்கம் குறித்து பேசினர். விழாவில் முன்னாள் ஊராட்சித் தலைவர் பிச்சை, பள்ளி மேலாண்மைக் குழுத்தலைவர் அருட்செல்வம், பட்டதாரி ஆசிரியர்கள் செல்வராசு, ஜெயலட்சுமி, இடைநிலை ஆசிரியர்கள் விஜயகுமாரி, கனகலெட்சுமி, சேகர், கற்பகமணி ஆகியோர் தன்னார்வலர் பெனசீர் பேகத்தை பாராட்டி பேசினர்.முன்னதாக பள்ளித்தலைமையாசிரியர் சரோஜா முன்னிலையில் அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளி மேலாண்மைக் குழுத்தலைவர் அருட்செல்வத்திடம் புரவலர் நிதியை வழங்கினர். புரவலர் நிதி வழங்கிய கொத்தமங்கலப்பட்டி ஆசிரியர்களை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.