கொடைக்கானல், ஜன. 21: கொடைக்கானல் நகரில் தோட்டக்கலை துறை சார்பில் பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவை பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் செட்டியார் பூங்கா தற்ேபாது பராமரிப்பின்றி மிகவும் சேதமடைந்து உள்ளது. இங்குள்ள நடைபாதைகள் அனைத்தும் பெயர்ந்து கிடக்கின்றன. கடந்த கஜா புயல் காலத்தில் விழுந்த மரங்கள் கூட அகற்றப்படாத நிலை உள்ளது. பெயரளவிற்கு கூட பூக்கள் இல்லாத சூழ்நிலையில் இப்பூங்காவிற்குள் உள்ளே சென்று பார்ப்பதற்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுவது வேதனையாக உள்ளது என சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘கொடைக்கானல் செட்டியார் பூங்காவிற்கு நுழைவு கட்டணம் செலுத்தி உள்ளே சென்றால் முறையான பராமரிப்பின்றி இருப்பதும், பூக்கள் இல்லாத நிலை இருப்பதை கண்டும் ஏமாற்றமடைந்தோம். இதுகுறித்து ஊழியர்களிடம் கேட்டால் பதில் கூட கூறுவதில்லை. எனவே மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலை துறை நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து செட்டியார் பூங்காவை புதுப்பித்து ஆண்டுதோறும் பூக்கள் பூப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் பூங்காவில் விழுந்துள்ள மரங்களை அகற்ற வேண்டும்’ என்றனர்.