×

பட்டா பிரச்னைகளுக்கு இன்று சிறப்பு முகாம்

சிவகங்கை, ஜன.21: சிவகங்கை மாவட்டத்தில் இன்று பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடக்க உள்ளது. சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: அரசின் சேவைகளை பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் அரசின் கொள்கையின் ஒரு அங்கமாக ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் கணினி திருத்த சிறப்பு முகாம் நடக்க உள்ளது.

ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இம்முகாம் நடைபெறும். அதனடிப்படையில் இன்று தேவகோட்டை வட்டம் நாரணமங்கலம் கிராமம், காரைக்குடி வட்டம் கோட்டையூர் கிராமம், திருப்பத்தூர் வட்டம் செவ்வூர் கிராமம், சிங்கம்புணரி வட்டம் உலகம்பட்டி கிராமம், சிவகங்கை வட்டம் கட்டாணிபட்டி கிராமம், காளையார்கோவில் வட்டம் குருந்தனிவாரியேந்தல் கிராமம், இளையான்குடி வட்டம் மேலாயூர் கிராமம், மானாமதுரை வட்டம் தெற்குசந்தனூர் கிராமம், திருப்புவனம் வட்டம் முக்குடி கிராமத்திலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. எனவே, பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பட்டா தொடர்பான தங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயன் அடையலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு