சென்னை: செம்மஞ்சேரி காவல் நிலையம் நீர் நிலையில் கட்டப்பட்டுள்ளதா, இல்லையா என்பதை விளக்கும் வகையில் வரைபடத்துடன் கூடிய விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் சார்பில் தாக்கல் செய்த மனுவில், செங்கல்பட்டு மாவட்டம் செம்மஞ்சேரியில் புதிதாக கட்டப்படும் காவல் நிலையம் தாமரைக்கேணி என்ற நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டுமான பணிகளுக்கு தடைவிதிக்க வேண்டும். நீர்நிலையை பழைய நிலைக்கு கொண்டு வருமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்ய ஐஐடி பேராசிரியர்கள் 2 பேர் அடங்கிய குழுவை நியமித்து உத்தரவிட்டது. ஐஐடி பேராசிரியர்கள் ஆய்வு செய்து அளித்த அறிக்கையில், காவல்நிலையம் கட்டப்பட்ட இடம் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, செம்மஞ்சேரி காவல் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர தடைவிதித்த நீதிபதிகள், தாமரைக்கேணி ஏரியை ஒட்டிய பகுதிகளில் மேற்கொண்டு எந்த கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்ததுபோது, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் ஆவணங்களின் அடிப்படையில் செம்மஞ்சேரி காவல் நிலையம் கட்டப்பட்டுள்ள இடம் நீர்நிலை என்றும், 1987ம் ஆண்டு வருவாய் துறை ஆவணங்கள் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இடம் மேய்க்கால் புறம்போக்கு என்றும் இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சம்பந்தப்பட்ட இடம் 1906ல், கிராம நத்தமாக வகைபடுத்தப்பட்டுவிட்டது. விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், செம்மஞ்சேரி காவல் நிலையம் நீர் நிலையில் கட்டப்பட்டதா என்பது தொடர்பான வரைபடத்துடன் கூடிய விரிவான அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி முதல் வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.