×

முத்தியால்பேட்டை ஊராட்சியில் புதிய நீர்தேக்க தொட்டி, நூலகம் திறப்பு: க.சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார்


வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் முத்தியால்பேட்டை ஊராட்சி, ஏரிவாய் கிராமத்தில் படித்த இளைஞர்களும், படிக்கும் மாணவ, மாணவிகளும் பயன்பெறும் வகையில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர்  தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8.19 லட்சத்த்தில் புதிய நூலகக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. அதேபோல், 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ் வல்லுவபாக்கம் பகுதியில் ரூ.14 லட்சத்தில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டது. இதனை, மக்கள் பயன்பாட்டுக்கு எம்எல்ஏ க.சுந்தர், எம்பி செல்வம் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.

இதில், மாவட்ட கவுன்சிலர் பொற்கொடி செல்வராஜ், வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் சேகர், ஒன்றிய கவுன்சிலர் பிரேமா ரஞ்சித்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்தியால்பேட்டை ரஞ்சித்குமார், ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் உள்பட பலர் கலந்துக் கொண்டனர். ஸ்ரீ காஞ்சிபுரம் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் தமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் சங்கீதா தலைமை தாங்கினார். எம்எல்ஏ க.சுந்தர், எம்பி செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு 228 பேருக்கு தலா 8 கிராம் தங்கம், பட்டம் படித்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம், 10 மற்றும் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் திருமண நிதியுதவி வழங்கினர். ஒன்றியக்குழு தலைவர் தேவேந்திரன், துணைத் தலைவர் சேகர், மாவட்ட கவுன்சிலர்கள் பொற்கொடி செல்வராஜ், ராஜலட்சுமி குஜராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் அமல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தில் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக மகளிர் சுய உதவிக்குழுப் பெண்களுக்கு நாட்டுக் கோழிகுஞ்சு வழங்கும் விழா நடந்தது. உத்திரமேரூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஹேமலதா ஞானசேகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு உறுப்பினர் சுகுணா சுந்தரராமன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சோழனூர் ஏழுமலை, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ராதா நடேசன் வரவேற்றார்.

காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு, கோழிக் குஞ்சுகளை வழங்கினார். மேலும், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அரசின் வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினார். மாவட்ட குழு உறுப்பினர் பத்மாபாபு உட்பட பலர் கலந்து கொண்டனர். 7 கிராமங்களில் உள்ள 14 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு 1400 நாட்டுக் கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 583 பேருக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் விழா சிறுகாவேரிப்பாக்கம் ஒன்றியக்குழு அலுவலகத்தில் நடந்தது. எம்எல்ஏ க.சுந்தர் தலைமை, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். எம்பி ஜி.செல்வம் முன்னிலை வகித்தார். மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் சங்கீதா வரவேற்றார். காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் பட்டம், பட்டயம் முடித்த 280 பேருக்கு 8 கிராம் தங்கம், ரூ.50 ஆயிரம், 10 மற்றும் 12ம் வகுப்பு படித்த 303 பேருக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் 583 பேருக்கு ரூ.2,15,75000 நிதியுதவியும், 4.6 கிலோ தங்கம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் மலர்கொடி குமார், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் நித்யா சுகுமார், ஒன்றியக்குழு துணைத் தலைவர் திவ்யபிரியா இளமது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், சீனிவாசன், காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பி எம் குமார், திமுக நிர்வாகிகள் தசரதன், எம்எஸ் சுகுமார், மலர்மன்னன் சேகர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள், பயனாளிகள் என திரளாக கலந்து கொண்டனர்.

Tags : New Reservoir ,Muthialpet Panchayat ,Library ,K. Sundar ,MLA ,
× RELATED திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் குரூப்...